புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோய தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
வள்ளமேறிவந்து நகரத்தெருக்களில் கால்களைப்பதிய
புழுதி சுழன்றாடி நகரைக்
கனவாய்ப் ப்டர்ந்ததாம் மழ
கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேன
கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட
புத்தரைக்கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்க
புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள்புதைய கரங்கள்கோர்த்து
உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு
கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு.
சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர
அரசமரக்கிளைக்குப் பதிலாய்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
சங்கமித்தாவின் கரங்களில்
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம
தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால்
குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபட
பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்துகொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்.
(April 18th, 2006)
No comments:
Post a Comment