Tuesday, September 26, 2006

புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோய தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
வள்ளமேறிவந்து நகரத்தெருக்களில் கால்களைப்பதிய
புழுதி சுழன்றாடி நகரைக்
கனவாய்ப் ப்டர்ந்ததாம் மழ
கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேன
கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட
புத்தரைக்கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்க
புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள்புதைய கரங்கள்கோர்த்து
உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு
கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு.
சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர
அரசமரக்கிளைக்குப் பதிலாய்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
சங்கமித்தாவின் கரங்களில்
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம
தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால்
குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபட
பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்துகொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்.

(April 18th, 2006)

No comments: