Tuesday, September 26, 2006

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?
யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்ததும் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைதான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளில் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்தததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததால் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு -வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்- சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயம்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது

உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம்.

உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம்.

ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக தோழர்களே’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம். அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான்.

இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு அந்தமாதிரித்தான் batஜ விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது.

அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது…. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது.

சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்கவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன்.

அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.
ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில் (?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

(Friday, June 9th, 2006 at 9:14 am )

1 comment:

இளங்கோ-டிசே said...

1.
KARTHIKRAMAS says:
June 9th, 2006 at 10:09 am edit
நான் சிறுவயதில் திரிசா கலரில் இருந்ததும், பின்னர் கிறிக்கெற் கிறிக்கெற் என்று வெய்யிலில் ஓடியாடி வைகைப் புயல் கலருக்கு மாறியதும் ஐதீகமல்ல உண்மையாம்..
இப்போதும் விட்டகுறை தொட்டகுறையாய் சென்ர வருடம் ஒரு லீக்-இல் சேர்ந்து 19 அடித்து பெருமை தேடித்தந்தாலும், லீக்-இல் ஒரு மேட்சிலும் எங்கள் அணி செயிக்கவில்லை. இந்த வருடம் முதல் முறையாய் செயித்துள்ளனர். நண் அணியில் இல்லை. மேலும் இது இரண்டுக்கும் சம்பந்தமில்லை.
உதைபந்தாட்டம், பெரிதாக உள்ளே இறங்கவில்லை. அப்படியே மழைக்கு பயந்து கைகால்களை உதறி ஓடுவது ஒரு பத்து பேர் பந்து பின்னாலேயே ஓடுவோம். இரண்டு பக்கமும் வஞனை இல்லாமல் நிறைய கோல்கள் “விழும்”. ஆனால், வீட்டின் அருகில் அண்ணா ஒருவர் சீரியஸான உதைப்பந்தாட்ட அணியில் ஒருவர் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டார். எங்களோடு அவர் விளையாடியது கிடையாது. :-( சும்மா கோச்சிங் கொடுப்பார் சில நேரங்கள்..
கில்லி சொல்லி அடித்ததுண்டு… கோலி.. அங்கே போகவேண்டாமே ;-)
2
Flying_Dragon says:
June 9th, 2006 at 10:13 am edit
//வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்// :-))
3
வசந்தன் says:
June 9th, 2006 at 10:27 am edit
அண்ணே, சுவாரசியமான பதிவு.
நீங்கள் சொல்வதுபோல் யாழ்ப்பாணத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இருந்த மரியாதை வேறெவர்க்கும் இருந்ததில்லை. ஆயிரக்கணக்கில டொனேசன் கட்டி, பரீட்சையில் தேறி உள்நுழைய வேண்டிய பள்ளிக்கூடமெல்லாம் விளையாட்டுத் திறமையிருந்தா தாங்களே வலிய இழுத்துக்கொண்டுபோய் சேத்துவிடுவாங்கள்.
நீங்கள் சகலதுறையிலயும் கலக்கியிருக்கிறியள் போல கிடக்கு.
நானெல்லாம் இன்றுவரை உதைபந்தாட்டம்தான். முதல் இடப்பெயர்வின் பின் கரப்பந்தாட்டத்திலும் ஒரு கை பார்த்ததுண்டு. (வலையம் தாண்டினாலும் மாவட்ட மட்டத்தில் வெல்ல முடியவில்லை. ஆனால் இடைக்காட்டுக் கொக்குகளின் அடிகளுக்குள்ளும் சமாளித்து ஒருபோட்டி வென்றது மாவட்டம் வென்றதுக்கு ஒப்பானது)
எங்கள் கல்லூரியில் கிரிக்கெட் (இன்றுவரை) மருந்துக்கும் இல்லை. மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கப்போய் பாதியில் கொட்டாவி விட்டுக்கொண்டு வந்துவிட வேண்டியதுதான். படிப்பில் நல்ல ஆர்வமுள்ளவர்களும் ரியூட்டறி வகுப்புக்களை நிறுத்தி கிரிக்கெட் பார்ப்பதைப் பார்த்து வியந்த காலமது.
இதைவிட உடற்பயிற்சிப் போட்டியில் தூள் பறத்தியதுண்டு. (மாவட்டக் கிண்ணம் எங்களையன்றி யாருக்கு?)
நாவாந்துறைப் பாடசாலையின் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் வீரர்களை ஞாபகம் இருக்கிறது. உங்களுக்கு ஞாபகமிருக்கா புரூஸ்லி, பிரபு என்று இரண்டு பேர்? எப்பேர்ப்பட்ட விளையாட்டு வீரர்கள்? கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்ததாக நீங்கள் சொல்லும் போட்டி பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஹாட்லிக் கல்லூரி அவர்களைத் தோற்கடித்ததால் (குருடன் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி எண்டுதான் நினைக்கிறன்) அவ்வாண்டுக்கான கிண்ணம் எமக்கு இலகுவானது.
நாவாந்துறை உதைபந்தாட்டத்துக்குப் பேர் போனது. இரு உதைபந்தாட்ட அணிகள் சென்மேரிஸ், சென்நீக்கிலஸ். இதில் பூரூஸ்லி, பிரபு போன்றோர் சென்ட்நீக்லஸ் அணி. கிட்டத்தட்ட பாடசாலை அணிதான். ஆனாலும் வலுவான அணிகளையெதிர்த்து விளையாடுவார்கள்.
யாழ்ப்பாணத்த்தில் சண்டைக்குப் பெயர்போன விளையாட்டென்றால் அது உதைபந்தாட்டம்தான். அதிலும் பிரசித்தமான இரு கோஸ்டிகளென்றால், பாடுமீன் - சென்.அன்ரனிஸ், நாவாந்துறையில் சென்மேரிஸ் -சென்நீக்லஸ். முன்னய அணிகளுக்கு ஊர்ப்பிரச்சினை( பாசையூர், குருநகர்), பின்னயவை ஒரே ஊர், ஆனால் சாதிப்பிரச்சினை.
நீங்கள் சொல்லும் வீரர்களின் தோற்றம் சம்பந்தமான பிரச்சினை நாங்களும் எதிர்கொண்டதுதான்.
உதைபந்தாட்டத்தில் புனித பத்திரிசியார், புனித யோவான் (யாழ் இந்துக்கல்லூரியையும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியையும் சேர்க்கலாம்) கல்லூரிகளை எதிர்த்து நட்புரீதியில் விளையாடும்போது இருமடங்கு நிறையுடையவர்கள் எதிர்த்தரப்பில் நிற்பார்கள். பொதுவாக 3 மல்லன்களை பிற்காப்புக்கு நிறுத்தி வைத்திருப்பார்கள். “உவ்ஙகள் வேள்விக்குக் கிடாய் வளத்த மாதிரி ஆக்கள வளக்கிறாங்கள்” எண்டு சொல்லிக்கொள்வோம். ஆனால் இவர்கள் ஏன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிற் கலந்துகொள்வதில்லையென்று புரிவதில்லை.
********************************
விளையாட்டுத் திறமை வெளிப்பாடும் வெற்றிகளும் பொருளாதாரம் சார்ந்தவை என்றே நினைக்கிறேன். வசதியான பாடசாலைகள் ஏதோவொரு விதத்தில் முன்னணியில் நிற்கின்றன. இடப்பெயர்வுக்கு முன் எங்கள் கல்லூரியில் நாளாந்தப் பயிற்சிக்கு குறைந்தது 25 பந்துகள் (3 அணிக்குமாக) மைதானத்துக்கு வரும். இடப்பெயர்வின்போது எதுவுமே கொண்டுவரவில்லை. ஆனால் உடனேயே சுதாரித்து பயற்சி பெற்று அவ்வாண்டுக்கான கிண்ணத்தை இரு அணிகள் கைப்பற்றினோம். முழுக்க முழுக்க புலத்திலிருந்து பழைய மாணவர் செய்த உதவிதான். எங்கள் பாடசாலை தரிசுக்காணியில் கொட்டில்போட்டு சுயமாக இயங்கியதும் முழுக்க முழுக்க பழைய மாணவர் செய்த உதவியால்தான்.
இவை மற்றப் பாடசாலைகளுக்கு எங்கே கிடைக்கப்போகின்றன? அதேநேரம் வசதியான பாடசாலைகள் ஏதோவொரு விதத்தில் திறமையானவர்களைத் தங்களுள் இழுத்துக்கொள்கின்றன.
**************
எழுத வெளிக்கிட்டால் கனக்க வந்திடும். அதால நிறுத்திறன்.
4
புழுக்கொடியல் says:
June 9th, 2006 at 10:55 am edit
நான் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுறது, கள்ளன்பொலீஸ், கம்புகுத்தி இதிலையெல்லாம் எங்கட வளவு சம்பியன். ஆனா தன்னடக்கம் காரணமா வெளியில சொல்லுறேல்லை. போன மாசம் என்ரை சிநேகிதர் ஒருத்தர் நான் இப்பிடியெல்லாம் சம்பியன் செம்பியனா இருந்தனானெண்டு சொல்ல நம்பேல்லை. ஏனெண்டு கேட்டன். நாளாந்த வாழ்க்கையில பொய் சரியா சொல்லாம அம்பிட்டுப்போன களங்களைக் குத்திக் காட்டுறார்
5
சின்னக்குட்டி says:
June 9th, 2006 at 12:46 pm edit
டிசே யோ. வசந்தனோ படிச்ச பள்ளிகூடத்தில் எங்கட காலத்தில் முயல் என்ற பட்ட பெயருடைய கால் பந்தாட்ட வீரன் டேவிட் பெக்கம் மாதிரி.. யாழில் பிரசித்தம்.
6
யாரோ says:
June 9th, 2006 at 1:31 pm edit
மைதானத்துக்கு போறது சரியான குறைவு, \ போறதில்லை. முதல் முதல் போனது உடற்பயிற்சி போட்டி ஒண்டுக்கு. கோட்டம் வெண்டு வலயத்தில் தெரிவாகி, மாடட்டம் வரை போனம். ஆனா கோட்ட மட்டத்திலை எங்களிட்டை தோத்தவனிட்டை , மாவட்ட மட்டத்திலை போய் தோத்திட்டு வந்தம் :(
7
சயந்தன் says:
June 9th, 2006 at 1:40 pm edit
பெரிசா விளையாட்டுக்களில ஆர்வம் இல்லை. 2ம் ஆண்டு படிக்கும் போது ஓட்டப்போட்டிக்கு பெயர் குடுத்திட்டு போட்டி நாளன்று குளுக்கோசை வாங்கி சாப்பிட்டு விட்டு தலைமறைவானவன் தான் அதன் பிறகு விளையாட்டுப் போட்டியென்றால் எனக்கு விடுமுறை நாள்.
ஆனாலும் சென்ரலுக்கும் சென்ஜோன்சுக்கும் கிரிக்கெட் நடக்கும் போது சுண்டுக்குளி மகளிரும் வேம்படி மகளிரும் கத்தி கத்தி செல்கையில் அட.. என்ர பள்ளிக்குடத்திலையும் இப்பிடி ஏதாவது பெரிய போட்டியள் நடந்தால். (ஏதோ ஒரு இடத்தில நிண்டு பாத்தால் எங்கடை பள்ளிக்குடமும் விளையாட்டு மைதானமும் தெரியுமாம் எண்டு சோபா சக்தி ம் இல சொல்லியிரக்கிறார். :)) எங்களுக்கும் மகளிர் தார்மீக ஆதரவு தருவினம் தானே எண்ட நப்பாசை இருந்தது. அம்மாடை கொலிஜ் சுண்டுக்களி அப்பாடை கொலிஜ் சென்ஜோன்ஸ் எண்டு அவையள் கத்தேக்கை இப்பிடி ஆராவது எங்களையும் இணைச்சு சொல்ல மாட்டினமா எண்ட மனவருத்தம் வந்ததுண்டு..
//குருடன் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி எண்டுதான் நினைக்கிறன்//
வசந்தன் யாராக இருந்தாலும் பெண்டிலை அடிச்சது தவறே எண்டதை இந்த இடத்தில நான் சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளேன் எண்டதை அழுத்திக் கூற பெரு விருப்பு கொண்டுள்ளேன்.
8
டிசே தமிழன் says:
June 9th, 2006 at 5:31 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
…..
/கில்லி சொல்லி அடித்ததுண்டு… கோலி.. அங்கே போகவேண்டாமே/
கார்த்திக் உங்களின் மூடிப்புதைந்த உண்மைகளையும் எழுதுங்கள். எனக்கும் கொஞ்சம் மாபிள் அடித்த ஞாபகங்கள் உண்டென்பதால் பின்னூட்டத்தில் நனவிடை தோயமுடியும் என்க.
…..
/வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்/
இந்த வாக்கியம் அதிக இடங்களில் பாவிக்கப்பட்டதோ… என்னவோ தெரியாது. எஸ்.பொவை நேர்காணல் கண்டு (ஷோபாசக்தியும் சுகனும் என்று நினைவு) ‘வானத்தில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய கதை’ என்று தலைப்பிட்டதை வாசித்தபோதே அப்படியே என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
….
வசந்தகுமாரா, உங்களின் பின்னூட்டத்தை வாசித்தபோது பழைய நினைவுகளை நினைத்து வாயூறத்தான் முடிகிறது.
/நாவாந்துறைப் பாடசாலையின் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் வீரர்களை ஞாபகம் இருக்கிறது. உங்களுக்கு ஞாபகமிருக்கா புரூஸ்லி, பிரபு என்று இரண்டு பேர்? எப்பேர்ப்பட்ட விளையாட்டு வீரர்கள்? கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்ததாக நீங்கள் சொல்லும் போட்டி பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஹாட்லிக் கல்லூரி அவர்களைத் தோற்கடித்ததால் (குருடன் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி எண்டுதான் நினைக்கிறன்) அவ்வாண்டுக்கான கிண்ணம் எமக்கு இலகுவானது./
நினைவு இருக்கிறது. அதே பெடியங்கள்தான் புருஸ்லியும், பிரபுவும்தான் forward விளையாடினவங்கள். பிறகு வெளிக்கிளப்பில் எல்லாம் அவங்கள் பட்டை கிளப்பியிருக்கின்றாங்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. உங்களின் பின்னூட்டத்தில் இருக்கும் புள்ளிகளை வைத்து யாழின் சமூக/சாதி பின்புலங்களை விரிவாக விவாதிக்க முடியும் போலத்தோன்றுகின்றது. நான் படித்த பாடசாலையிலும் உந்த சமூக/சாதி அந்தஸ்தைவைத்தே பல திறமைசாலிகள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஊரில் நான் படித்த பாடசாலையை எந்தளவுக்கு நேசிக்கின்றேனோ அதேயளவுக்கு இவ்வாறான பல காரணங்களால் வெறுக்கவும் செய்கின்றேன்.
…..
/நான் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுறது, கள்ளன்பொலீஸ், கம்புகுத்தி இதிலையெல்லாம் எங்கட வளவு சம்பியன். ஆனா தன்னடக்கம் காரணமா வெளியில சொல்லுறேல்லை. போன மாசம் என்ரை சிநேகிதர் ஒருத்தர் நான் இப்பிடியெல்லாம் சம்பியன் செம்பியனா இருந்தனானெண்டு சொல்ல நம்பேல்லை. ஏனெண்டு கேட்டன். நாளாந்த வாழ்க்கையில பொய் சரியா சொல்லாம அம்பிட்டுப்போன களங்களைக் குத்திக் காட்டுறார்/
புழுக்கொடியல் (நல்ல பெயர் :-) ), இதுக்கு எல்லாம் கவலைப்படுவதா? பாருங்கள் நான் கொஞ்சம் உண்மையும் நிரம்ப பொய்யும் கலந்து எழுத வசந்தன் ஓடிவந்து எனக்கு ஒரு ஆதார முள்ளந்தண்டு தந்து பின்னூட்டம் எழுதியிருக்கின்றமாதிரி, உங்களுக்கு ஒத்த அலைவரிசையில்/அல்லது உங்கள் வயதுகளில் இருக்கும் ஒருவரைப்பிடித்து கதையளவுங்கோ. பிறகு எல்லாப் பொய்களும் புனைவுகளும் நிஜங்கள் ஆகுமாம் :-).
……
/ எங்கட காலத்தில் முயல் என்ற பட்ட பெயருடைய கால் பந்தாட்ட வீரன் டேவிட் பெக்கம் மாதிரி.. யாழில் பிரசித்தம். /
சின்னக்குட்டி முயல் என்றபெயருடையவரின் திறமைகள் பற்றி எனது அண்ணாக்கள் கதைக்கும்போது கேட்டதாய் நினைவுண்டு.
….
வசந்தன், யாரோ, சயந்தன்….நீங்கள் கூறுகின்றமாதிரி நானும் உந்த உடற்பயிற்சிப்போட்டிகளில் பங்குபற்றுவதுண்டு. இப்போதும் அங்கே பாடசாலையில் படித்ததென்ற சாட்சிக்காய் உடற்பயிற்சியில் -வலயமோ ஏதோ ஒரு மட்டத்தில்- வென்றுவிட்டு எடுத்த புகைப்படந்தான் (பெண்கள் இல்லாமலா என்ன?) அத்தாட்சியாக இருக்கின்றது. ஆனால் உடற்பயிற்சிப்போட்டிகளிலும் என்னைப்போன்றவர்களுக்குச் சோகந்தான்.நாங்கள் எப்போதாவதுதான் வலய/கோட்ட மட்டங்களில் வென்று அடுத்த அளவுக்குப் போவோம். ஆனால் எங்கடை வகுப்பு பெண்கள் இலகுவாய் வென்று மாவட்ட அளவுக்கு எல்லாம் சென்றுவிடுவார்கள். அதைவைத்தே எங்களை நக்கலடித்த நாள்களை நினைத்தால்…நெஞ்சமெல்லாம் பற்றியெரிகிறது :-).
….
—— //குருடன் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி எண்டுதான் நினைக்கிறன்//
வசந்தன் யாராக இருந்தாலும் பெண்டிலை அடிச்சது தவறே எண்டதை இந்த இடத்தில நான் சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளேன் எண்டதை அழுத்திக் கூற பெரு விருப்பு கொண்டுள்ளேன். ——
சயந்தன் நானும் இந்தவிடயத்தில் வசந்தனைக் கண்டிக்கவே பெருவிருப்புக் கொள்கின்றேன். ஆனால் நீங்கள் கண்டனஞ்செய்வதற்கு ஏதாவது மூன்றாவது நபரோ/சம்பவமோ பின்னணியில் இருக்காது என்று நம்புகின்றேன் :-).
9
Bobby Gajendra says:
July 11th, 2006 at 12:48 pm edit
Hey DJ!
Where did you go to school in Jaffna?
-Bobby